Sunday, November 10, 2013

ஒரு தாயின் குமுறல்

காலேஜு போன மக
காணாம போயி ட்டாளே
கடுதாசி எழுதி வச்சு
காதலனோட
போயிட்டாளே ,

பாத்து பாத்து
வளர்த்த மக
பாதியில போயிட்டாளே
கொல்லாம ஏ உசுர
கொன்னுபுட்டு போயிட்டாளே ...

சந்தையில நிக்கவைச்சு
சாதிசனம் ஏசுதே
கலங்காத என் ஐய்யனாரு
கண்ணீரோட நிக்குதே

படுபாவி எங்க போன ,
என் பாவிமக எங்க போன
பெத்தெடுத்த பாவத்துக்கா
சொல்லாம கொள்ளாம
ஓடி போன ?

காலுல முள்ளு குத்தி
கிழிச்சாலும் உழைச்செனே
உங் -கலியாண காசு சேக்க

கா வயிறா கெடந்தேனே !

உங்கப்பன்கிட்ட உதவாங்கி
காலேஜு சேத்தேனே ...
நீ காதலிச்சு ஒடுவன்னு
கனாக்கூட காணலியே ....

பட்டணத்து புள்ள மாதிரி
பந்தாவா நீ போக
பட்டிக்காட்டு பொம்பள நான்
பாத்து பாத்து பூத்தேனே ....

பட்ட வலி மறக்குமே
பருவமக உன் சிரிப்புல
இப்ப
பட்டமரம் ஆயிபுட்டேன்
பாவி மக உன் நடப்புல ....

மொரட்டு மாப்பிள்ளையும்
மூத்தவள வெரட்டிபுட்டான்
மூணாவது தங்கச்சியும்
மூலையில ஒதுங்கிப் புட்டா ,
எப்படி நான் கர சேப்பேன்
ஏ..மாரியாத்தா வழிகாட்டு
ஏ மக மேல பட்ட கறைய
காலபோக்கில் நீ மாத்து..

பிடிவாதம் பிடுச்சிருந்தால்
பிடிச்சவனோட சேத் திருப்பேன்
புரியாம போயிட்டாயே..
ஏம் மனச புண்ணாக்கி
போயிட்டாயே....

உன்னபத்தி நினச்சயே
உடன்பிறப்ப நினைச்சயா?
நீ படிக்க பாடுபட்ட,அவ பாசவலி ,மறந்தயா ?
வாழ்வெல்லாம் கஷ்டப்பட்ட
அவளுக்கு இனி வாழ்க்கை கிடைக்குமா ?
உன் ஓடுகாலி தனத்துக்கு
ஏந் குடும்ப மொத்தம் இரையாகுமா?

உன்ன நினச்சு அழுவேனா ?
உன் சிறுச நினைச்சு அழுவேனா ?

ஏம் புள்ள
இப்படி செஞ்ச ...
என ஏமாத்தி தள்ளி நின்ன ...

தலையெல்லாம் வலிக்குதே
என் தலைஎழுத்து
வாழ்க்கையே தாறுமாறா கிடக்குதே ...

என் செல்ல மக அவ
சீரோட இருப்பாளோ ,சிரிப்போடு இருப்பாளோ ?
சின்னா பின்னமாகி சிதைஞ்சு தான் போவாளோ ...

தட்டிகேக்க ஆளு இல்லாம
தடுமாறி போவாளோ ?
நான் இல்லாம எம்புள்ள
நடுங்கித்தான் போவாளோ ?

மெத்த பிடுச்ச மாமியாரு
மகளாட்டம் நடத்துவாளோ ?
இல்ல ,
மேனியெல்லாம் வதங்க
வேல வெட்டி தருவாளோ ?

ஏ குலசாமி காப்பாத்து ...
என் குழந்தைய காப்பாத்து...

பக்கத்து வீட்டு வசந்தாக்கா
பலதடவ சொன்னாலே
நம்பாம இருந்தேனே ,
என் நம்பிக்கையில் மண்ணபோட்டா ..

ஒருதடவ சொல்லி இருந்தா
அவனப்பத்தி விசாரிச்சுருப்பேன் ...
இப்படி கண்டத எண்ணி
கவலைப்பட்டு கிடக்க மாட்டேன் ...

கொன்னு புட்டு போயிருந்தா
நிம்மதியா போயிருப்பேன் ,
கொத்துயிரும் கொளுயிருமா
கிடக்கவச்சு போயிட்டயே...

பிறக்கும் போது
தந்தது எல்லாம் வலியேஇல்ல
இப்ப நீ தந்த வலி அதவிட அதிகமடி

எல்லாத்தையும் சொல்ற மக
ஏண்டீ இத சொல்லல ,
இந்த அம்மா நினைப்பு
அப்ப உனக்கு எப்புடி புள்ள வரல ...

உன்ன ஒழுங்கா வளக்கலன்னு
ஊரு சனம் பேசுது ..
உன்னையும் என்னையும் பத்தி
கூசாம கூவுது ....
உன்ன தட்டி கேக்க முடியாம
பாசம் வந்து தடுக்குது ...
பசி பொறுக்காத பச்ச மக
சாப்பிட்டையோனு
நெஞ்சுக்குள்ள தவிக்குது ....

சமுதாயம் மாறலையே ....
சாதிசனம் மாறலையே ....
காதலுக்கு எதிரியில்ல
கலியாணத்த தடுப்பவயில்ல ...
நான் பாத்து
செஞ்சுவச்சா .,
நகநட்டு போட்டுருப்பேன் ....
நீ பாத்து செஞ்சுகிட்ட
என்னடி உனக்கு நான் செய்வேன் ?

ஓடி போகும் பிள்ளைகளே
ஒரு நிமிஷம் கேளுங்களேன் ,,,
உங்க தாய்முகத்த பாத்தாவது ,முடிவ கொஞ்சம்
மாத்துங்களேன் .....
உங்கள நல்ல படியா வளத்தவங்க
நம்பிக்கைய கொல்லாதீங்க.....
நாலு பேரு மதிக்கும் படி நல்ல வாழ்க்கை
தருவாங்க ......

காசு பணம் போயிருந்தா
கஷ்டப்பட்டு சேத் திருப்பேன் ....
என் கன்னுகுட்டி
போயிடுச்சே ...
எங்க போய் நான் பாப்பேன் .....?

Saturday, November 09, 2013

களையிழந்த கிராமியக் கலைகள்

களையிழந்த கிராமியக் கலை
கலங்கி நிற்கும் மக்கள் கதை
கேளுங்கய்யா எங்க கதை
பாடிபுட்டோம் சோகக்கதை

ஆடிப்பாடி வளர்த்தகலை -இப்போ
அடியோடு அழியும் நிலை
அவலத்தில் எங்க நிலை
அறிந்திடுவீர் அவல நிலை

பாடிப்பாடி வளர்த்தகலை - இப்போ
படிப்படியா அழியும் நிலை
பரிதவிப்பில் எங்க நிலை
பட்டினியில் சாகும் நிலை

நயமாய் வளர்த்த கலை - இப்போ
நலிவடைந்து நிற்கும் கலை !
நாட்டத்தோடு வளர்த்த கலை
நாதி யற்று நிற்கும் கலை!

கரகாட்டம் கட்டி நின்னா
கிறங்கி நிற்கும் ஊருசனம் - இப்போ
பசியிலே கிறங்கி நாங்க
பரிதவித்து நிற்கிறோமே !

மயிலாட்டம் ஆடி நின்னா
மதி மயங்கும் ஊருசனம் - இப்போ
மறித்து போக மனமின்றி
மயங்கி நாங்க நிற்கிறோமே!

தப்பாட்டம் ஆடிபுட்டா
தாறுமாறா கூடும் கூட்டம்
கொண்டாண்டம் போட்ட கூட்டம் -இப்போ
படும் பாடோ திண்டாட்டம் !

தென்மாங்கு பாடிபுட்டா
தெருவே கூடிநிற்கும் - இப்போ
தேடுவார் யாருமின்றி
தெருவிலே நிற்கிறோமே !

மெட்டு கட்டி பாடிபுட்டா
பட்டி தொட்டி ஆடுமடா - இப்போ
பச்சபுள்ள பட்டினியா
தொட்டிலிலே ஆடுதடா!

கூத்துக்கட்ட ஆளிருந்தும்
கூடுவார் யாருமில்ல !
பாட்டுக்கட்ட ஆளிருந்தும்
பசி தீர்க்க யாருமில்ல !

சின்னத்திரை வெள்ளித்திரை
சேர்ந்து செய்த சதிவலை
ஆனதய்யா திரை சீலை
போனதய்யா எங்க வேலை

பாட்டன் பூட்டன் காலம் தொட்டு
பரம்பரையா வளர்த்த கலை - இப்போ
பட்டினத்தார் பாதம் தொட்டு
நிற்கிறோமே வெக்கம் கெட்டு

தெருவிலே கூத்துக் கட்டி
தென்மாங்கு பாட்டுக்கட்டி
படிச்சவன் பாடு -இப்போ
நடுத்தெருவில் நிக்குதய்யா !

வயிற்ரை கட்டி வாயை கட்டி
கலை வளர்த்த குடும்பமெல்லாம்
கழுத்துல கயிறைக் கட்டி
தூக்குல தொங்குதய்யா!

ஆயர்கலை அறுபத்தி நான்கும்
அழிகின்ற அவல நிலை
அழியாத கலையாக என்றும்
நிலை வாழ துணை செய்வீர் !

source
http://eluthu.com/kavithai/154571.html

Monday, October 07, 2013

நினைவின் கல்வெட்டு

அன்னையாகிய என்னுள்
உன்னை உணர்ந்த 
அந்த நாள் முதல்
என் மனக்கோட்டையின் அரசாட்சி
முழுவதிலும் நீ

ஏதேதோ கற்பனைகள்
இரவு பகலாய் உன் நினைவு
கையில் உறவாடிய புத்தகத்தில்
கருத்து நிலைக்கவில்லை
கண்கள் தேடியதோ உனக்கான
பெயர் அடையாளத்தை

ஆயிரம் உறவுகள் எனக்கு இருந்தும்
ஆயிரத்து ஒன்றாக
என்னுள் வந்த நீ மட்டுமே எல்லாமாய்

தனிமையை நான் உணராத
அந்தப் பத்து மாதங்கள்
அழகிய அவ்வின்ப நாட்கள் யாவும்
உனக்கே சமர்ப்பணம் உறவே

இதோ உன்னை காணும் ஏக்கத்துடன்
வலி தாங்கி மனம் ஏங்கிய கணம்
உன் குரல் கேட்ட இன்ப சிலிர்ப்புடன்
சிறு மயக்கம்

ஒளி தேடிய கண்ணும்
உன் வாசம் தேடிய நாசியும்
உன் ஸ்பரிசம் தேடிய மனதும்
விழித்து எழுந்ததோ உயிர் வரை
சென்று தாக்கிய வேறு ஒலி கேட்டு

பெரும் சிலிர்ப்புடன் பெற்றவளின்
குரல் கேட்டு திறந்த என் கண்கள்
முழுவதிலும் தெங்கி நின்ற ஏக்கம் யாவும்
என் அன்னையே உனக்காக

அன்னை இன்பம் உணர்ந்த பின்
என் இதயம் முழுவதும்
அம்மா உன் உயிரோவியம்

உள்ளம் நிறைத்த இரு உறவின்
உயிர் ஸ்பரிசம் கண்ட அந்த நொடி
இன்றுவரை இன்பம் தரும்
நினைவின் கல்வெட்டு

யோகநந்தினி கார்த்திக் 
        ஈரோடு