Monday, October 07, 2013

நினைவின் கல்வெட்டு

அன்னையாகிய என்னுள்
உன்னை உணர்ந்த 
அந்த நாள் முதல்
என் மனக்கோட்டையின் அரசாட்சி
முழுவதிலும் நீ

ஏதேதோ கற்பனைகள்
இரவு பகலாய் உன் நினைவு
கையில் உறவாடிய புத்தகத்தில்
கருத்து நிலைக்கவில்லை
கண்கள் தேடியதோ உனக்கான
பெயர் அடையாளத்தை

ஆயிரம் உறவுகள் எனக்கு இருந்தும்
ஆயிரத்து ஒன்றாக
என்னுள் வந்த நீ மட்டுமே எல்லாமாய்

தனிமையை நான் உணராத
அந்தப் பத்து மாதங்கள்
அழகிய அவ்வின்ப நாட்கள் யாவும்
உனக்கே சமர்ப்பணம் உறவே

இதோ உன்னை காணும் ஏக்கத்துடன்
வலி தாங்கி மனம் ஏங்கிய கணம்
உன் குரல் கேட்ட இன்ப சிலிர்ப்புடன்
சிறு மயக்கம்

ஒளி தேடிய கண்ணும்
உன் வாசம் தேடிய நாசியும்
உன் ஸ்பரிசம் தேடிய மனதும்
விழித்து எழுந்ததோ உயிர் வரை
சென்று தாக்கிய வேறு ஒலி கேட்டு

பெரும் சிலிர்ப்புடன் பெற்றவளின்
குரல் கேட்டு திறந்த என் கண்கள்
முழுவதிலும் தெங்கி நின்ற ஏக்கம் யாவும்
என் அன்னையே உனக்காக

அன்னை இன்பம் உணர்ந்த பின்
என் இதயம் முழுவதும்
அம்மா உன் உயிரோவியம்

உள்ளம் நிறைத்த இரு உறவின்
உயிர் ஸ்பரிசம் கண்ட அந்த நொடி
இன்றுவரை இன்பம் தரும்
நினைவின் கல்வெட்டு

யோகநந்தினி கார்த்திக் 
        ஈரோடு