Saturday, November 09, 2013

களையிழந்த கிராமியக் கலைகள்

களையிழந்த கிராமியக் கலை
கலங்கி நிற்கும் மக்கள் கதை
கேளுங்கய்யா எங்க கதை
பாடிபுட்டோம் சோகக்கதை

ஆடிப்பாடி வளர்த்தகலை -இப்போ
அடியோடு அழியும் நிலை
அவலத்தில் எங்க நிலை
அறிந்திடுவீர் அவல நிலை

பாடிப்பாடி வளர்த்தகலை - இப்போ
படிப்படியா அழியும் நிலை
பரிதவிப்பில் எங்க நிலை
பட்டினியில் சாகும் நிலை

நயமாய் வளர்த்த கலை - இப்போ
நலிவடைந்து நிற்கும் கலை !
நாட்டத்தோடு வளர்த்த கலை
நாதி யற்று நிற்கும் கலை!

கரகாட்டம் கட்டி நின்னா
கிறங்கி நிற்கும் ஊருசனம் - இப்போ
பசியிலே கிறங்கி நாங்க
பரிதவித்து நிற்கிறோமே !

மயிலாட்டம் ஆடி நின்னா
மதி மயங்கும் ஊருசனம் - இப்போ
மறித்து போக மனமின்றி
மயங்கி நாங்க நிற்கிறோமே!

தப்பாட்டம் ஆடிபுட்டா
தாறுமாறா கூடும் கூட்டம்
கொண்டாண்டம் போட்ட கூட்டம் -இப்போ
படும் பாடோ திண்டாட்டம் !

தென்மாங்கு பாடிபுட்டா
தெருவே கூடிநிற்கும் - இப்போ
தேடுவார் யாருமின்றி
தெருவிலே நிற்கிறோமே !

மெட்டு கட்டி பாடிபுட்டா
பட்டி தொட்டி ஆடுமடா - இப்போ
பச்சபுள்ள பட்டினியா
தொட்டிலிலே ஆடுதடா!

கூத்துக்கட்ட ஆளிருந்தும்
கூடுவார் யாருமில்ல !
பாட்டுக்கட்ட ஆளிருந்தும்
பசி தீர்க்க யாருமில்ல !

சின்னத்திரை வெள்ளித்திரை
சேர்ந்து செய்த சதிவலை
ஆனதய்யா திரை சீலை
போனதய்யா எங்க வேலை

பாட்டன் பூட்டன் காலம் தொட்டு
பரம்பரையா வளர்த்த கலை - இப்போ
பட்டினத்தார் பாதம் தொட்டு
நிற்கிறோமே வெக்கம் கெட்டு

தெருவிலே கூத்துக் கட்டி
தென்மாங்கு பாட்டுக்கட்டி
படிச்சவன் பாடு -இப்போ
நடுத்தெருவில் நிக்குதய்யா !

வயிற்ரை கட்டி வாயை கட்டி
கலை வளர்த்த குடும்பமெல்லாம்
கழுத்துல கயிறைக் கட்டி
தூக்குல தொங்குதய்யா!

ஆயர்கலை அறுபத்தி நான்கும்
அழிகின்ற அவல நிலை
அழியாத கலையாக என்றும்
நிலை வாழ துணை செய்வீர் !

source
http://eluthu.com/kavithai/154571.html

No comments: