Tuesday, January 28, 2014

பெண்மையின் மௌனம்

வரன் பார்த்து
வாழ்க்கை வரமாகும்
நேரத்தில் ...,
பெண்மையின் மௌனம்
'சம்மதம் '!

பிறந்த வீடு பிரிந்து
புகுந்த வீடு
புகும் வேளையில்...,
பெண்மையின் மௌனம்
'பிரிவு '!

முதன்முதலாய்
முகம் பார்த்து பேசும்
மணவாளனுக்கு .......
பதில் பேசாத ,
பெண்மையின் மௌனம்
'நாணம் '!

இதுவரை
பழகிடாத எதார்த்தத்தை
பிடித்தவருக்காக
ஏற்றுக்கொள்ளும்போது ,
பெண்மையின் மௌனம்
'தியாகம்' !

சொல்லித் தீர்த்துவிட
வேண்டிய விஷயத்தை ...,
சொல்லமுடியாமலே போன
சூழ்நிலையில் .....
பெண்மையின் மௌனம்
'கண்ணீர் '!

எதிர்பார்ப்புகள்
ஏமாற்றங்களான போது ,
பெண்மையின் மௌனம்
'வேதனை '!

ஏங்கித்தவித்த விஷயமொன்று
எதிர்பார்க்காமல் கிடைக்கும்
தருணத்தில் ...
பெண்மையின் மௌனம்
'களிப்பு '!

உண்மைக்கோ ,
பெண்மைக்கோ
கலங்கமென்ற
சமயத்தில் .....
பெண்மையின் மௌனம்
'கோபம் '!

தாவணி உடுத்திய
கன்னியவள் ...
தாய்மையென்னும் கண்ணியத்தை
உணரும் போது ....,
பெண்மையின் மௌனம்
'பேரானந்தம் '!

வெளிவரும் வார்த்தைகளே
அர்த்தப்ப்படுமானால் ...,
ஆயிரம் சூழ்நிலைகளில்
வெளிப்படாத .....
பெண்மையின் மௌனம்
"பொக்கிஷமே" !!!....

பிரியா கங்காதரன்

No comments: